யாழில் ரயில்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய சிறுவர்கள் பொலிஸாரால் கைது

2 months ago



யாழ்ப்பாணத்தில் ரயில்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் ரயில்கள் மீது கடந்த சில தினங்களாக அரியாலை பகுதியில் வைத்து கல்வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன.

இந்தத் தாக்குதலில் ரயில்களின் கண்ணாடிகள் சேதமடைந்தும், பயணி ஒருவர் காயமடைந்தும் இருந்தார்.

தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ரயில் நிலைய அதிபரால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் ரயில் பயணி ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் எடுத்த காணொளி ஒன்றில் மூன்று சிறுவர்கள் ரயில் மீது கல் வீச்சுத் தாக்குதலை நடத்துவது பதிவாகி இருந்தது.

அந்தக் காணொளியின் அடிப்படையில் மூன்று சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டு நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.