வவுனியாவில் துப்பாக்கி ரவைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சீருடைகளுடன் இருவர் கைது


வவுனியா போகஸ்வெவ சலினிகம கிராமத்தில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சீருடைகளுடன் நேற்று மாலை இருவர் கைது செய்யப்பட்டனர் என வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்டக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அந்தப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றைப் பொலிஸார் சோதனை செய்தனர்.
இதன்போது வீட்டில் இரண்டு கிராம் கேரள கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அந்த வீட்டை மேலும் சோதனை செய்த போது. துப்பாக்கி ரவைகள் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் சீருடைகளும் கண்டு பிடிக்கப்பட்டன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வீட்டிலிருந்து ரி-56 வகை துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 296 ரவைகள்.இ12-போர் வகையை சேர்ந்த 27 ரவைகள். எம்-16 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 19 ரவைகள், ரி-56 வகை துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ரவைகளின் தொகுப்பு. ரி-56 துப்பாக்கிப் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் 124 பயிற்சி ரவைகள், 9 மில்லிமீற்றர் தானியங்கி கைத் துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 365 வெற்று ரவைகள் மற்றும் 24 பயன்படுத்தப்பட்ட ரி-56 வெற்று ரவைகள் என்பன மீட்கப்பட்டன.
அவற்றுடன் இராணுவ மற்றும் விசேட அதிரடிப்படை சீருடைகள், அதற்கான பிரத்தியேகப் பொருள்கள், காலணிகள், கால்சட்டை, தொப்பிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
பொலிசாரின் விசாரணைகளில் வீட்டின் உரிமையாளர் பொலிஸ் விசேட அதிரடிப் படை வீரர் என்பதும், அவர் இந்தப் பொருள்களை வீட்டில் மறைத்து வைத்திருந்தமையும் தெரியவந்துள்ளன.
வீட்டின் உரிமையாளரான விசேட அதிரடி படை வீரரும், பொலன்னறுவை, ஹிங்குராக்கொடை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்புக் காவலில் விசாரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 5 குற்றவாளிகள் தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

இந்தியாவில் அகதிகளாக தங்கியிருக்கும் இலங்கையர்களின் நுழைவுக்கான தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது
